வைகோ மீண்டும் "ஏமாறுவதை" மதிமுகவினர் விரும்பவில்லை....!
சென்னை: மீண்டும் ஒரு முறை திமுகவால் வைகோ ஏமாற்றத்துக்குள்ளாக்கப்படுவதை மதிமுகவினர் விரும்பவில்லை. இது வைகோவிடமும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால்தான் ஈரோடு கல்யாணத்தின்போது வைகோ மாற்றி யோசித்துப் பேசியதன் பின்னணி என்கிறார்கள்.
திமுகவாலும் சரி, அதிமுகவாலும் சரி இரண்டு முறை வைகோ கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்டவர். இதை வைகோ மறந்திருந்தாலும், மதிமுகவினர் இன்னும் மறக்கவில்லை.
இரு கட்சிகளும் வைகோவையும், மதிமுகவையும் கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்த கட்சிகள் என்பது மதிமுகவினரின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போய் உள்ளன. இதனால்தான் இந்த முறை திமுகவுடன் வைகோ நெருங்குவது போல போனது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
வைகோவிடம் நேரடியாகவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதுகுறித்துப் புலம்பித் தள்ளி விட்டனர். இதனால்தான் ஈரோடு கணேசமூர்த்தி இல்லத் திருமண விழாவின்போது திமுக கூட்டணி குறித்து இன்னும் சிந்திக்கவே இல்லை என்று பேச வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

திமுகவுடன் முதல் முறையாக
கடந்த 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போதுதான் முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி வைத்தது மதிமுக. அப்போது பாஜக, திமுக, மதிமுக ஆகியவை ஓரணியாக களம் கண்டன.

சீட் தர மறுத்ததால் வெளியேற்றம்
ஆனால் 2001 மற்றும் 2006 ஆகிய சட்டசபைத் தேர்தல்களின்போது திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது. கெளரவமான சீட்களை ஒதுக்க திமுக மறுத்ததால் தன்மானத்தைக் காப்பதற்காக வெளியேறுவதாக வைகோ தெரிவித்தார்.

2 முறையும் கடைசி நேரத்தில்
இந்த இரண்டு முறையும் கடைசி நேரத்தில்தான் திமுக தனது வேலையைக் காட்டியதால் வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார் வைகோ.

ஒரு தொகுதிக்காக
2001 சட்டசபைத் தேர்தலில் வேறு தொகுதிகளைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, சங்கரன்கோவில் தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று வைகோ கேட்க, அதை திமுக ஒரேயடியாக மறுத்து விட்டது.

2006 கலாட்டா
2006 தேர்தல் கலாட்டா மிகவும் வித்தியாசமானது. தேர்தலுக்கு முன்பு பொடாவில் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் வைகோ. அப்போது மீண்டும் வைகோவிடம் நெருங்கியது திமுக. கருணா்நிதி வேலூர் சிறைக்குப் போய் வைகோவை சந்தித்தார்.

வெளியில் வந்ததும் திமுகவுடன் கூட்டணி
இதையடுத்து தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணி வைத்தார் வைகோ. ஆனால் இந்த முறையும் மதிமுக கேட்ட தொகுதிகளையும், சீட்களையும் ஒதுக்க முன்வரவில்லை திமுக. இதனால் அதிர்ச்சி அடைந்தார் வைகோ.

மீ்ண்டும் அதிமுகவுடன்
இதனால் அதிரடியாக, யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவிடமே மீண்டும் போனார் வைகோ. இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக தோல்வியைச் சந்தித்தது.

2011ல் மீண்டும் ஏமாற்றம்
ஆனால் 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடரவே மதிமுகவும், வைகோவும் விரும்பினர். தொடரவும் செய்தனர். ஆனால் இந்த முறை ஜெயலலிதாவின் பார்வை, விஜயகாந்த் மீது விழுந்தது. அவரை உள்ளே கொண்டு வருவதற்காக இருக்கிற கட்சிகளை இழக்கக் கூட அவர் தயாராக இருந்தார். அதனால் கூட்டணிக் கட்சியினரை தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடைசி வரை அழைக்காமலேயே இருந்தது அதிமுக.

கேவலமான நம்பர்
அதிலும் மதிமுகவை கடைசி வரை அதிமுக கண்டு கொள்ளவே இல்லை. ஒரிரு சீட்டுகள் என்ற நிலைக்கு மதிமுகவை கொண்டு வந்தது அதிமுக. கடும் அதிர்ச்சியும், கோபமும் ஆத்திரமும் அடைந்த வைகோ தேர்தலையேப் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

2014ல் பாஜகவிடம் ஏமாற்றம்
இதேபோல 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் முதல் ஆளாகப் போய் கூட்டணி வைத்தார். ஆனால் விஜயகாந்த் கட்சியை விட மோசமான நிலைக்கு மதிமுகவை கொண்டு போய் விட்டது பாஜக தலைமை. அவர்கள் கொடுத்த நம்பரில் மதிமுகவுக்கு சுத்தமாக திருப்தி இல்லை என்ற போதிலும், சகித்துக் கொண்டு கூட்டணியில் இடம் பெற்றார் வைகோ.

மீண்டும் மீண்டும் ஏமாற்றினால் எப்படி
இந்த நிலையில்தான், ஜெயலலிதா இல்லாத நிலையில் பலவீனமாகியுள்ள அதிமுகவை எதிர்த்து முறியடிக்க வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்காக பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை இழுக்க அது முயன்று வருகிறது. ஆனால் மீண்டும் ஒருமுறை வைகோ ஏமாந்து விடக் கூடாது என்பதில் அவரை விட அவரது கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

வேண்டாம் திமுக
எனவே திமுக கூட்டணி வேண்டாம் என்று மதிமுகவினர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். கட்சியின் உயர் மட்டம் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை திமுக கூட்டணியை யாருமே விரும்பவில்லையாம். இதை வைகோவிடமே கூறி வருகின்றனர்.

யோசனையில் வைகோ
இதை வைகோ எதிர்பார்க்கவில்லை. திமுகவினரும் கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். கட்சியினரின் விருப்பத்தைத் தாண்டி முடிவெடுக்கும் தலைவர் வைகோ இல்லை என்பதால், நேற்றைய திருமண விழாவின்போது அப்படிப் பேசியுள்ளார் வைகோ என்கிறார்கள்.

திருப்திகரமான சீட் கிடைத்தால்
அதேசமயம், திமுகவிடமிருந்து திருப்திகரமான எண்ணிக்கையில் சீட் கிடைக்கும்பட்சத்தில் கூட்டணி குறித்து கண்டிப்பாக மதிமுகவும், வைகோவும் யோசிப்பார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் கண்டிப்பாக அடிமாட்டு லெவலுக்கு சீட் கொடுத்தால் கூட்டணி தேவையில்லை என்றும் மதிமுகவினர் மத்தியில் பேசிக் கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications