திடீரென ஜாமீன் கோரியுள்ள வைகோ.. பின்னணி என்னவாக இருக்கும்?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பரபரப்புகள் கிளம்பும் வேளையில் மதிமுக பொதுச்செயலாளர் ஜாமீன் கோரியுள்ளதால் அவர் விரைவில் ரஜினிகாந்த்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் ஜாமினில் வெளிவந்ததும் நடிகர் ரஜினிகாந்த்தை சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் சிறையில் உள்ளார். ஜாமீனில் வெளியே செல்கிறீர்களா என்று நீதிபதி கேட்ட போதும் அதனை மறுத்து வைகோ சிறை சென்றார். தொடர்ந்து 3 முறை நீதிமன்றத்தில் ஆஜரான போதும் தான் ஜாமீன் கோரப்போவதில்லை என்று மறுத்துவிட்டார் வைகோ.
மக்கள் நலக் கூட்டணியை சேர்ந்த் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் சிறையில் வைகோவை சந்தித்து வெளியே வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதனை மறுத்த வைகோ இன்று திடீரென ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வைகோ வெளிவருவது அரசியலின் அடுத்தகட்ட பரபரப்புக்கு வித்திட்டுள்ளது.

கூட்டணி நாயகன்
வைகோ இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்றே சொல்லலாம், 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எதிரான எதிர்ப்பு அலைகளை சரிசெய்ய இவர் மக்கள் நலக் கூட்டணி என்ற இயக்கத்தை தொடங்கி அதில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், வாசனின் த.மா.கா, விஜயகாந்த்தின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒன்று சேர்த்து தேர்தலை சந்தித்தனர். ஆனால் துரதிஷ்டமாக இந்தக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

உடைந்த ம.ந.கூ
இந்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான அரசியல் அமைப்பு சட்ட மாநாட்டில் தனக்கு உடன்பாடு இல்லை என்று வைகோ கூறியதையடுத்து ம.ந.கூ.யில் விரிசல் ஏற்பட்டு மக்கள் நலக் கூட்டணி உடைபட்டது. இது அரசியல் கூட்டணி என்றும் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் மக்கள் நலப் பணிகள் தொடரும் என்று அறிவித்தனர்.

குற்றச்சாட்டு
ஆனால் அதிமுகவை எதிர்த்து வரும் தேமுதிகவை கடந்த சட்டசபை தேர்தலில் வைகோ பலவீனப்படுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஜாமீனில் சிக்கல் இல்லை
இந்த நிலையில் வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே வைகோவை ஜாமீனில் வெளியே செல்கிறீர்களா என நீதிபதி கேட்டுள்ள நிலையில் ஜாமீன் கிடைப்பத்தில் எந்த சிக்கலும் இல்லை. வைகோ சிறையில் இருந்து வெளியே வந்ததும் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஜினியை சந்திப்பாரா?
அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா, கொள்கை இல்லாத ரஜினி எப்படி வரலாம்? என்று அரசியல் கட்சியினர் ரஜினியை துளைத்தெடுக்கின்றன. இந்தக் சூழலில் அவருக்கு வைகோ ஆலோசனை கூறுவாரா அல்லது அரசியல் களம் எத்தகையது என்று தெரிய வைப்பாரா என்பதே அடுத்தடுத்த அதிரடிகளாக இருக்கப் போகின்றன என்கின்றனர் கட்சியினர்.












Click it and Unblock the Notifications