வைகோ தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாற்றம்: வரும் 24ல் உளுந்தூர்பேட்டையில் பிரசாரம்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருந்த தேர்தல் சுற்றுப் பயணத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தே.மு.தி.க. - மக்கள் நல கூட்டணி - த.மா.கா. ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ கடந்த 16-ந் தேதி முதல் தனது முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 27 ஆம் நாள் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார். எனவே, அன்று உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பதிலாக ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று உளுந்தூர்பேட்டை தொகுதி கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வைகோ சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். எனவே, ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி, பல்லடம், தாராபுரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் வைகோ மேற்கொள்ள இருந்த பிரசாரம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப் படுகிறது. இது குறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.