ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்: வைகோ
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மக்கள் நலக்கூட்டணி சார்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மதிமுகவின் 24 பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடுகிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு, குறைந்தபட்ச செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தையும் முடித்துள்ளோம். மூன்றாவது கட்ட சுற்றுப்பயணத்தை மார்ச் 1-இல் தொடங்கி, 4-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நிறைவு செய்கிறோம். இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் 4-ஆவது கட்ட பிரசாரம் நடைபெறும். பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.
மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள். அதிமுகவோ அல்லது திமுகவோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீட்க முடியாத நிலைக்குத் தமிழகம் சென்றுவிடும். எனவே, கூட்டணி ஆட்சி நடத்த எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும்.
திமுக, அதிமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தயாராக உள்ளனர். எனவே, அவற்றை தடுக்க மக்கள் நலக்கூட்டணி சார்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, பணம் கொடுப்பதை தடுப்போம் என வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications