மதிமுக பிரமுகர் கொலை... சிவகாசியில் இருபிரிவினரிடையே மோதல்- போலீஸ் தடியடி
சிவகாசி: சிவகாசி அருகே மதிமுக பிரமுகர் கோவிந்தராஜ் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிவகாசி அருகே சிந்துராஜபுரத்தில் டீக்கடை நடத்தி ஒன்றிய மதிமுக நிர்வாகியான கோவிந்தராஜ், நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள், கோவிந்தராஜ் உடலை வாங்க மறுத்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரமேஷ் பாண்டியன் என்பவரே கோவிந்தராஜைக் கொலை செய்தார் என சந்தேகித்த மக்கள், திடீரென அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களைக் களைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் போலீசாரின் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களைத் தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
இதற்கிடையே, சாலை மறியலில் ஈடுபட்டவர்கலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து சமாதானப் படுத்தினார். அதனைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
வெவ்வேறு சமூத்தினரிடையே ஏற்படும் மோதலைத்தவிர்க்க அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால், கட்டிடங்கள் மீதிருந்த கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
இதற்கிடையே, கோவிந்தராஜ் கொலை வழக்குத் தொடர்பாக ரமேஷ் பாண்டியன் உட்பட 4 பேர் போலீசில் சரணடைந்தனர்.