வரலாறு படைக்கும் மதிமுகவின் தூத்துக்குடி பொதுக்குழுக் கூட்டம்.. வைகோ
தூத்துக்குடி: தென்தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23வது மாநில பொதுக்குழுக்கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23வது மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று காலை 10மணிக்கு தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்ற குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி சுகம் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடந்தது. ஆலோசனைக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, துரை பாலகிருஷ்ணன், மல்லை சத்யா, மாநில பொருளாளர் டாக்டர்.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல் வரவேற்று பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தோன்றுவதற்கான முதல் பொதுக்குழு கூட்டம் 1993ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் திருச்சியில் நடைபெற்றது. வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு மதிமுக பல்வேறு பொதுக்குழு கூட்டங்களை சந்திந்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு மதிமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டம் நடந்தவேளையில் நானும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் இருந்தோம். கட்சியின் பொதுச்செயலாளரான நான் சிறையில் இருந்தவேளையில் இந்த பொதுக்குழுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடந்தது.
பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசுவதற்கான உரையை நானே எனது கைப்பட சிறையில் இருந்தவாறே எழுதி அனுப்பினேன். 78பக்க இந்த உரையை கூட்டத்தில் நான்பேசியது போல, அங்கே உரை நிகழ்த்தியது சிறப்பு அம்சமாகும். இந்திய வரலாற்றில் என்னை விட தியாகம் செய்த தலைவர்கள் பலர் சிறையில் இருந்துள்ளனர்.
இருந்தபோதும் நான் சிறையில் இருந்தவேளையில் நடந்த இந்த பொதுக்குழுக்கூட்டம் போன்று இந்திய அரசியலில் வேறு எந்த கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நடந்தது இல்லை. கடந்த பொதுக்குழு கூட்டம் சென்னை சிறுதாவூரில் நடந்தது. இப்படி எத்தனையோ பொதுக்குழு கூட்டங்களை மதிமுக நடத்தியபோதும் இதுமாதிரியான பிரமாண்டமான பொதுக்குழு கூட்டம் இதுவரை நடந்தது இல்லை.
இந்த பொதுக்குழு கூட்டத்தை தூத்துக்குடியில் நடத்துவது குறித்து நான் எனது அன்புதம்பி ஜோயலிடம் கேட்டபோது இதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னது போன்று மாநில பொதுக்குழுகூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளார். மாநிலபொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான அமைப்பு உள்ள மண்டபமாக தூத்துக்குடியிலுள்ள மண்டபம் அமைந்துள்ளது.
பொதுக்குழுவில் கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. உய்ர்நிலை கூட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. தென்தமிழகத்தில் தூத்துக்குடியில் முதன்முதலாக நடைபெறும் இந்த மாநில பொதுக்குழுக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.பி.கணேசமூர்த்தி, செந்தில்அதிபன், மாவட்ட செயலாளர்கள் ஜோயல், சரவணன், பெருமாள், தில்லைசெல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தினைத்தொடர்ந்து இன்று காலை 10மணிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23வது மாநில பொதுக்குழுக்கூட்டம் தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.