மோடிக்கு வாழ்த்து… நதிநீர் இணைப்பு தீர்மானங்களோடு முடிந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்
சென்னை: இந்திய பிரதமராக மோடி பதவியேற்றுள்ளதற்கு மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் வாழ்த்து கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப்பின்னர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (29.05.2014 வியாழக்கிழமை) காலை சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.
அதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் பின்வருமாறு:
தே.ஜ கூட்டணியின் சாதனை
இந்திய நாட்டின் ஜனநாயக ஒளி உலகம் வியக்கப் பிரகாசிக்கிறது. 16 ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அலை ஓங்கி எழுந்ததால், பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களையும் பெற்றது பிரமிக்கத்தக்க சாதனை வெற்றி ஆகும்.
மோடிக்கு பாராட்டு
எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு துறவியாகவே வாழ்ந்து, தனது தலைமைப் பண்பை நாட்டின் கோடானுகோடி மக்கள் மனதில் பதிய வைத்து, உன்னதமான வெற்றியை ஈட்டி, இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
வாக்காளர்களுக்கு நன்றி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளித்து வரலாற்றுச் சிறப்புக்குரிய வெற்றியை வழங்கிய இந்திய நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கும், தமிழ்நாட்டில் அக்கூட்டணியில் இடம் பெற்று இருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, 75 இலட்சத்து 24 ஆயிரம் வாக்குகளை வழங்கிய தமிழக வாக்காளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
வைகோவுக்கு வாழ்த்து
நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற நரேந்திரமோடி அவர்கள், மே 26 ஆம் நாள் பிரதமராகப் பொறுப்பு ஏற்ற நிகழ்வு, இந்திய ஜனநாயகத்திற்கு மகுடம் சூட்டி இருக்கின்றது.
இந்த இனிய நாளில், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதைப் போல, இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த இனப் படுகொலையாளன் ராஜபக்சே பங்கேற்றதற்கு ‘எதிர்ப்புத் தெரிவித்து, மே 26 ஆம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி அறப்போராட்டதை வெற்றிகரமாக நடத்திய பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
கருப்பணம் மீட்பு
மே 26 ஆம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றார். 27 ஆம் தேதி கூடிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே மிகவும் மெச்சத்தக்க முடிவு எடுக்கப்பட்டது.
‘இந்தியப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்தும் கருப்புப் பணத்தை மீட்பேன்' என்று, தேர்தல் பிரச்சாரத்தில் தான் கூறியதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றியதற்கு, இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய நதிகளாக அறிவிப்பு
ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு உள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து, அம்மாநிலமே எந்த முடிவும் எடுத்துக் கொள்ளலாம் என்ற தீங்கான கேரள அரசின் அணைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதைக் கைவிட வேண்டும் என்றும், ரத்துச் செய்ய வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளைப் போன்று, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகளை, தேசிய நதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
நதிநீர் இணைப்பு
இந்தியாவில் உள்ள கோடானுகோடி விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும், வேளாண் நிலங்கள் பாசனம் பெறவும், மக்கள் பருகுவதற்குக் குடிதண்ணீர் பெறவும் வழிவகுக்க, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகள் இணைக்கப்பட வேண்டும்.
தீபகற்ப நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு
தமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
தாய்மொழி வழிக் கல்வியை இழந்துவிட்டால், தமிழ் இனம் தனது அடையாளத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் முற்றாக இழந்துவிடும் கேடு நேர்ந்துவிடும்.
எனவே, தமிழ் மொழிக்கு எதிரான, ஆங்கில வழி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.