மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்!

அவருக்கு வயது 80.
தமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி பா ஆதித்தனாரின் மூத்த மகன் பா ராமச்சந்திர ஆதித்தன். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தவர்.
தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்த இவர் மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார். தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தி வந்தார்.
தமிழ் நாளிதழ் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமையான நாளிதழான 'கதிரவனை' சென்னையிலும் நெல்லையிலும் தொடங்கினார். அன்றைக்கு மிக மிக வேகமாக வளர்ந்த நாளிதழ் என்ற பெருமை கதிரவனுக்கு உண்டு.
பெரிய அய்யா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ராமச்சந்திர ஆதித்தன். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவனாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனுக்கு கண்ணன் ஆதித்தன், கதிரேசன் ஆதித்தன் என இரு மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். மனைவி பெயர் பங்கஜம் அம்மாள்.
சென்னை அடையாறில் வசித்து வந்த ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டதில் முக்கியப் பங்காற்றியவர் ராமச்சந்திர ஆதித்தன். தொண்ணூறுகளில் இதற்காக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்து, வங்கியை மீட்டார். அதன் இயக்குநராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபங்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் அடையாறில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலை பெசன் நகர் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
தம்பியை இழந்த குறுகிய காலத்தில்...
சில மாதங்களுக்கு முன்புதான் பா. ராமச்சந்திர ஆதித்தன் தம்பியும், தினத்தந்தி அதிபருமான பா. சிவந்தி ஆதித்தன் மரணமடைந்தார். இந்த நிலையில் பா.ராமச்சந்திரன் ஆதித்தன் மறைந்திருப்பது தந்தி - மாலைமுரசு குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications