மதுரைக்கு ஆபத்து இல்லை... அச்சம் வேண்டாம்- நந்தி உணர்த்தும் உண்மை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் முழுவதுமாக சேதமடைந்த நிலையிலும் அங்கிருந்த நந்தி சிலைக்கோ கழுத்தில் அணிவித்திருந்த மாலைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மதுரை: மீனாட்சியம்மன் தீ விபத்தினால் மதுரைக்கு ஆபத்து வர உள்ளதாக பலரும் அச்சுறுத்தும் நிலையில் எந்த ஆபத்தும் வராது என்பதை உணர்த்தும் வகையில் நந்தி கழுத்தில் இருந்த மாலை உணர்த்துவதாக பக்தர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7000 சதுர அடி கொண்ட மண்டபம் நொறுங்கி விழுந்தது.
தீ விபத்தினால் மண்டபத்தில் இருந்த கலைநுட்பமிக்க தூண்களும் நொறுங்கி விழுந்து சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மதுரைக்கு மிகப்பெரிய ஆபத்து வர வாய்ப்பு உள்ளதாக பலரும் அச்சுறுத்தி வருகின்றனர்.
வீரவசந்தராயர் மண்டபத்தில் சாமி சன்னதியை நோக்கி உள்ள நந்தி சிலைக்கோ அதன் கழுத்தில் இருந்த மாலையோ கருகாமல் இருப்பது மதுரைக்கு எந்த ஆபத்து வராது என்பதை உணர்த்தியுள்ளது.

இடிந்து விழுந்த மண்டபம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்துள்ளது. இங்கிருந்த கலைநுட்பமிக்க தூண்களும் நொறுங்கி விழுந்தன. மண்டபம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது.

ஆட்சிக்கு ஆபத்து
இந்த தீ விபத்தினால் ஆள்பவர்களுக்கும் ஆட்சிக்கும் ஆபத்து என்றும் மதுரை மாநகரை பூகம்பமோ அல்லது வெள்ளமோ தாக்கும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர். தீ விபத்தினால் ஏற்பட்ட சோகத்தை விட ஆள் ஆளுக்கு சொல்லும் ஆருடங்கள் மதுரைவாசிகளை அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அச்சப்பட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறது நந்தி சிலை.

மழை தரும் நந்தி
வீரவசந்தராயர் மண்டபத்தில் சாமி சன்னதியை நோக்கி நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தியைச் சுற்றி கட்டப்பட்டுள்ள தொட்டியானது மழைச்சடங்கோடு தொடர்புடையது. நாட்டில் மிக வறட்சி ஏற்படும் காலங்களில் மழை வேண்டி ஜபம் செய்து மழைக்காக பிரார்த்தனை செய்வார்கள்.

கருகாத நந்தி மாலை
இந்த நந்தித் தொட்டிக்கு அருகே உள்ள பகுதி முழுவதும் சேதமடைந்தது பக்தர்களை வேதனையடையச் செய்தாலும் நந்திக்கோ நந்தியின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. இது பக்தர்களை ஆறுதலடையச் செய்துள்ளது. இதன் மூலம் மதுரை மாநகருக்கோ மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உணர்த்தும் வகையில் உள்ளது. இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷப வாகனம்
நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன் நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் வாகனமாக நந்தி இருக்கிறார். நந்தியிடம் அனுமதி பெற்று சிவனை பார்க்கச் செல்வது இன்றைக்கும் பாரம்பரியமாக உள்ளது. எனவேதான் நந்தியின் கழுத்தில் உள்ள மாலையை வாடாமல் வைத்து மக்களுக்கு ஆபத்து நேராது என்று உணர்த்தியுள்ளார் சிவபெருமான்.












Click it and Unblock the Notifications