மதுரை: இடிந்து விழுந்த வீர வசந்தராயர் மண்டபம் - தீயிலும் கருகாத நந்தி மாலை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு தெற்கே உள்ள, வீரவசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் முழுமையாக சேதமடைந்தது. இங்கிருந்த கலைநுட்பமிக்க தூண்களும் நொறுங்கி விழுந்தன.
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுர பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 7000 சதுர அடியில் இருந்த பழமை வாய்ந்த வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது.
தீ விபத்தினால் மண்டபத்தில் இருந்த கலைநுட்பமிக்க தூண்களும் நொறுங்கி விழுந்து சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மண்டபம் திருமலைநாயக்கருக்கு முன்னர் வாழ்ந்த முத்து வீரப்ப நாயக்கரால் 1609 முதல் 1623 வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது. வீரவசந்தராயர் மண்டபத்தில் சாமி சன்னதியை நோக்கி உள்ள நந்தி சிலைக்கோ அதன் கழுத்தில் இருந்த மாலையோ கருகாமல் இருந்தது பக்தர்களை சற்றே ஆறுதல் படுத்தி உள்ளது.
7000 சதுர அடி மண்டபம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எந்த சேதமும் இல்லை என்றும் வீரவசந்தராயர் மண்டபம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ். தீ விபத்தில் முழுமையாக சேதமடைந்தது.
இடிந்து விழுந்த மண்டபம்
இங்கிருந்த கலைநுட்பமிக்க தூண்களும் நொறுங்கி விழுந்தன. இம்மண்டபத்தில் வசித்த 500க்கும் மேற்பட்ட புறாக்களும் இறந்து, கருகி கிடந்தன. தேர்களுக்காக வைத்திருந்த மூங்கில் தட்டிகள், கம்புகள், கயிறு உள்ளிட்ட பொருட்களும் தீயில் நாசமாயின. நேற்று பகல் ஒரு மணியளவில் முழுமையாக மண்டபம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
மழைக்காக பிரார்த்தனை
வீரவசந்தராயர் மண்டபத்தில் சாமி சன்னதியை நோக்கி நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தியைச் சுற்றி கட்டப்பட்டுள்ள தொட்டியானது மழைச்சடங்கோடு தொடர்புடையது. நாட்டில் மிக வறட்சி ஏற்படும் காலங்களில் மழை வேண்டி ஜபம் செய்வதும், கூட்டு வழிபாடு, ஹோமம் செய்வதும் இங்கு பிரசித்தம். அப்போது நந்தியை சுற்றி உள்ள தொட்டியில், நந்தி மூழ்கும் அளவிற்கு நீரினை நிரப்புவர். அன்று முழுவதும் மழைக்காக பிரார்த்திக்கப்படும். இதனால் நந்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மழை பொழிய செய்வார் என்பது நம்பிக்கை.
கருகாத நந்தி மாலை
இந்த நந்தித் தொட்டி உள்ளிட்ட இப்பகுதி முழுவதும் சேதமடைந்தது பக்தர்களை வேதனையடையச் செய்தாலும் நந்திக்கோ நந்தியின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது பக்தர்களை ஆறுதலடையச் செய்துள்ளது. இதனால் மதுரை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
மூடி மறைக்கும் அதிகாரிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தின் மீது கடந்த 2015ல் இடி விழுந்து சேதமடைந்தது. கடந்த ஆண்டு கோயிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கோயில் உள்ளே உள்ள பிரசாதம் தயாரிக்கும் கூடமான முக்கிய மடப்பள்ளியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இதை அதிகாரிகள் மூடி மறைத்து விட்டனர். இந்நிலையில்தான், தற்போது கோயில் வளாகத்திற்குள்ளேயே தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் இடியும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.