மெர்சல் படம் வெளியிட்ட தியேட்டரில் கன்னட அமைப்பினர் வன்முறை.. வைகோ கண்டனம்
சென்னை: கர்நாடக அரசு தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளாார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூருவில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்பட விளம்பரப் பதாகைகளைக் கிழித்ததோடு, கட் அவுட்டுகளை உடைத்து இருக்கின்றார்கள்.
திரை அரங்குகளில் படம் பார்த்துக் கொண்டு இருந்த தமிழர்களை விரட்டியடித்து வெளியேற்றி. திரைப்படத்தை ஓட விடாமல் கன்னட வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பொய் வீடியோ
அதற்காக, கன்னடர் ஒருவரைத் தமிழர் தாக்குவதாக ஒரு பொய்யான காணொளியைக் கன்னடத் தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி ஒளிபரப்பச் செய்து, கன்னடர்களுக்கு ஆத்திரமூட்டி இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

பழைய மிரட்டல்
கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களைத் திரையிடக் கூடாது; 91 ல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியதைப் போல், மீண்டும் தாக்குவோம் என மிரட்டல்கள் விடுத்துள்ளனர்.

அமைதியான தமிழர்கள்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழர்கள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் கவலை அளிக்கின்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்து, தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையான காவிரி நீரை மேட்டூருக்குத் திறந்து விடாமலும், சட்டவிரோதமாக மேகேதாட்டு, ராசி மணலில் கர்நாடகம் அணைகள் கட்டுகின்ற நிலையிலும், அம்மாநிலத்தில் வாழுகின்ற தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு ஆதரவாக எந்த அறவழிக் கிளர்ச்சியிலும் ஈடுபடாமல், அமைதி காத்து வாழ்ந்து வருகின்றனர்.

கர்நாடக அரசின் கடமை
நிலைமை இப்படி இருக்க, தமிழர்கள் மீது வெறுப்பை விதைத்து, எதிர்ப்பை வளர்த்து வருகின்ற கன்னட அமைப்புகள், தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடக் கூடாது என்று கலவரத்தில் ஈடுபடுவதைத் தடுத்து, தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கர்நாடக அரசு செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications