இன்னும் 2 நாளுக்கு மழை இருக்கு.. சூறைக் காற்றுடன் இருக்குமாம்.. வானிலை மையம் குளு குளு அறிவிப்பு
இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் சூறைக் காற்றுடன் மழை பெய்யும் என்றும் மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த இருநாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் தொடங்கிய நிலையில் மார்ச் 3ம் தேதியில் இருந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் மழை பெய்தது.
மேலும் கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
சிலு சிலு மழை
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை எப்படி?
சென்னையை பொருத்தவரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சூறைக்காற்றுடன் மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது சில இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
குடிநீருக்கு..
இந்த மழை குடிநீர் பஞ்சத்தை போக்கும் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். என்றாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போன நிலையில் கோடையில் பொழியும் இந்த மழையை மக்கள் மகிழ்ச்சியாய் வரவேற்றுள்ளனர்.