தமிழகத்தில் நாளையும் சிலு சிலு மழை.. வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி அறிவிப்பு
தமிழகத்தில் நாளையும் சிலு சிலுவென மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: தென் தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்திலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் எதிர்ப்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 65 சதவீதம் அளவிற்கு குறைவாகவே பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
இந்நிலையில், தென் தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அது சொன்னது போன்றே கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் தென் பகுதிகளில் மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து, நாளையும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்றும் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications