தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை பெய்யுமாம்!... குடை அவசியம் மக்களே!! #Chennairain
கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்காத்திருந்த வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் தங்களின் பைகளில் குடை, ரெயின்கோட் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை கடந்த 30ம் தேதி தொடங்கியது. பல இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை சென்னையில் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேரம் செல்லச் செல்ல கனமழை கொட்டித் தீர்த்தது. விட்டு விட்டு பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒருமணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். சற்றே ஓய்ந்த மழை பிற்பகலில் மீண்டும் கொட்டித் தீர்த்தது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சூழல் உள்ளதாக கூறினார்.
மேலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றார். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications