புத்தாண்டு கொண்டாட்டம்: நள்ளிரவிலும் சேவை அளிக்க காத்திருக்கும் மெட்ரோ ரயில் !
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. வழக்கமாக கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய இரு மார்க்கங்களிலும், காலை 6 மணிக்கு ரயில்கள் இயக்கம் துவங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். விடுமுறை, முக்கியமான பண்டிகை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருந்தபோதும், மெட்ரோ ரயில்கள் கூடுதல் நேரத்துக்கு இயக்கப்பட்டன.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 31ஆம் தேதி (இன்று) இரவு 12 மணிக்கு பிறகும் கூடுதல் ரயில்கள் இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இரவில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரின் போக்குவரத்து வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி 1.30 மணிக்கு கடைசி ரயிலும், ஆலந்தூரில் இருந்து 2 மணிக்கு கடைசி ரயிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.