மேட்டுப்பாளையம்-குன்னூர் ரயில் ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
நீலகிரி: மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் திடீர் என ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அரவங்காடு, வெலிங்டனில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் ஆடர்லி பகுதியில் பெய்த மழை காரணமாக தண்டவாளத்தில் பாறை சரிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த பாறையை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் ரத்து செய்ப்பட்டுள்ளது. ஆனால் குன்னூர்- ஊட்டி இடையே மலை ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பல சுற்றுலாப் பயணிகளில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரும் மலை ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் மலை ரயில் பாறை சரிந்து விழுந்தது காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.