முழு கொள்ளவை நோக்கி மேட்டூர் அணை: நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக வரும் 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி தெரிவித்திருந்தது.
ஆனால் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையை திறக்க உத்தரவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து தற்போது 103 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம், நாளை முதலே தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அணை நீர்மட்டம்
ஆகஸ்ட் 15 ஆம் தேதி அணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.10 அடியாக இருந்தது.
68.91 டி.எம்.சி தண்ணீர்
அணைக்கு விநாடிக்கு 89,207 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கொள்ளளவு 68.91 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
120 அடியை எட்டும்
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்னும் சில தினங்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications