மேட்டூர் அணைக்கு மேலும் அதிக நீர் வரத்து.. நீர் திறப்பும் அதிகரிப்பு
மேட்டூர்: கர்நாடகத்திலிருந்து கூடுதலாக நீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கேரள மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் கபிணி அணைக்கு அதிக அளவில் நீர் வந்து கொண்டுள்ளது.
கபிணி அணை கிட்டத்தட்ட நிறையும் நிலையில் உள்ளது. அணையில் விரிசல் வேறு ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது. கிட்டத்தட்ட விநாடிக்கு 35,000 கன அடி நீர் தற்போது கபிணியிலிருந்து திறந்து விடப்படுகிறது. இது அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
தற்போது மேட்டூர் அணக்கு விநாடிக்கு 38,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 74 அடியைத் தாண்டியுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதுவரை மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. 100 அடியை நீர்மட்டம் தாண்டியதும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று தெரிகிறது.