காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை திறப்பு- 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் நீர்மட்டம்
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ல் (நாளை) மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது.
காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பது இல்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி நீர் திறப்பது என்பது பல ஆண்டுகளில் சாத்தியமற்றதாகிவிடுகிறது. தற்போது 300 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்து வருகிறது.
இதனால் தற்போது ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி மேட்டூர் அணை பாசனத்துக்காக நாளை திறக்கப்பட இருக்கிறது.
மேட்டூர் அணை கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 12-ல் திறக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 8 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. ஜனவரி மாதம் இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
முதல்வர் திறந்து வைக்கிறார்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டு சென்றார் முதல்வர் எடப்பாடி.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையில் இன்று நீர்மட்டம் 101.720 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பானது 67.089 டி.எம்.சி யாகவும் உள்ளது.
அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1439 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications