தொடரும் மழை... மேட்டூர் அணை 100 அடியை நெருங்குகிறது
சேலம்: தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதற்கேற்ப தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மெதுவாக அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 94 அடியாக உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும். மழை தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று தெரிகிறது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 11,000 கன அடி நீர் வரை வந்து கொண்டுள்ளது. பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அணை விரைவில் 100 அடியைத் தொடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications