காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி... விறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழையால் கர்நாடக மாநில அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர்: கனமழை எதிரொலியாகக் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் விரைவாக அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த ஒரு மாதமாகப் பெய்து வரும் கன மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் இந்த 2 அணைகளிலிருந்தும் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.21 அடியிலிருந்து 45.71 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் 6,800 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 11,500 கனஅடியாக உயர்ந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
நீர்வரத்து குறையாமல் அதிகரித்து வருவதால் இன்று 2-வது நாளாகவும் பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு 7,873 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று இது 7,769 கனஅடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்து 10,535 கனஅடியாக உயர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications