வக்கீல் கோட்டுக்கு மேல கட்சி துண்டை போடலைன்னா டென்ஷனாகும் விஜயகாந்த்- "அதிருப்தி" பார்த்திபன் தகவல்
சென்னை: நீதிமன்றத்துக்கு போகும் தேமுதிக வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் கோட் மீது கட்சி துண்டை அணிந்து செல்லாவிட்டால் விஜயகாந்த் கடுமையாக கோபப்படுவார் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மேட்டூர் பார்த்திபன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
தேமுதிகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் ஒருவரான மேட்டூர் பார்த்திபன் எம்.எல்.ஏ. சத்யம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தேமுதிகவில் யாருக்கும் மரியாதையே கிடையாது.... மாவட்ட செயலாளர் என்பவர் ஒரு கட்சியின் மிகப் பெரிய பவுண்டேசன்... ஒரு எஸ்.பி மாதிரி.. மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இணையானவர்...
அப்படி இருக்கிற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உட்காரும்போதே 'ஒரு தலைவர்' (விஜயகாந்த்) என்ன பண்ணுவார் தெரியுமா? ஒவ்வொருத்தன் தலைமேலயும் கத்தி தொங்கிகிட்டிருக்கு என்பார்...
நாங்களும் மேலே பார்ப்போம்.. அய்யய்யோ கத்தி கித்தி கீழே விழுந்து அறுத்திருமோ பயந்துகிட்டு இருப்போம்... அதைத் தொடர்ந்து ஏராளமான புகார் வருகிறது என்பார்...
அவ்வளவுதான்.. எனக்கு மேல ஒரு வேலை இருக்கு என்று மைக்கை கீழே வைத்துவிட்டு சென்றுவிடுவார்... அதற்குப் பின்னர் கீழே வரவே மாட்டார். அவ்வளவுதான் இன்றைய மாவட்ட செயலாளர் கூட்டம் இனிதே முடிந்தது.
கொள்கை பரப்பு செயலர் எழுந்து, இங்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.. பொட்டலம் சாப்பாடு ரெடியாக இருக்கு சாப்பிட்டு கிளம்புங்க என்பார்.. இதை போன்ல சொல்லியிருந்தா போதுமே...
தேமுதிகவில் பேண்ட் சட்டை போட்டு நிகழ்ச்சிக்கு போக கூடாது; வேட்டி கட்டித்தான் போகனும்.
கோர்ட்டுக்கு போகும்போது வக்கீல் கோட்டுக்கு மேல கட்சி துண்டைப் போட்டு போகனும் என்பதை எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?
அப்படி கட்சி துண்டைப் போடலைன்னா, நீ கோர்ட்டுக்கு எதுக்கு பேண்ட் சட்டையோட போன?ன்னு கேட்பார் (விஜயகாந்த்)... இல்லங்கை அது கோர்ட்.. அப்படித்தான் போகனும்னு சொல்வோம்...
சரி.. வக்கீல் கோட்டுக்கு மேல கட்சி துண்டை போட்டு போக வேண்டியது என்று சொல்வார் (விஜயகாந்த்)...அது எப்படி கோர்ட்டுக்குள் கட்சி துண்டை போடமுடியும் என்று கேட்டால் அதெல்லாம் சரி வராது; நாளையில் இருந்து இப்படி செய்தால் சரிவராது என கோபப்படுவார்.
இவ்வாறு மேட்டூர் பார்த்திபன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications