தங்க நகைக்காக அழகு நிலைய பெண் கழுத்தறுத்து கொலை: போலீஸ் விசாரணை

செங்குன்றத்தை அடுத்த பவனிநகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் செங்குன்றம் காமராஜர் நகரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் மாலினி (32). இவர்களுக்கு பிரமோத் (7) என்ற மகனும், பவித்ரா (5) என்ற மகளும் உள்ளனர்.
மாலினி புழல் சிறை எதிரே உள்ள காந்தி தெருவில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். தினமும் காலை 9 மணிக்கு அழகு நிலையத்தை திறந்தால் இரவு 9 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்வார். அதோடு மணப்பெண் அலங்கார ஆர்டர் பெற்று செய்து வந்தார்.
வியாழக்கிழமையன்று மாலினி ஒரு திருமண ஆர்டர் பெற்று இருந்தார். ஆர்டர் கொடுத்தவர் மாலை 6 மணி அளவில் மாலினியை அழைக்க கடைக்கு வந்தார். அங்கு மாலினி தரையில் விழுந்து கிடந்தார். மயங்கி கிடப்பதாக கருதிய அவர் பக்கத்து கடைக்காரரிடம் தகவல் சொன்னார்.
அவர்கள் வந்து பார்த்த போதுதான் மாலினி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர் அணிந்து இருந்த தாலி செயின், வளையல், நகைகள் கொள்ளை போய் இருந்தது.
தகவல் கிடைத்ததும் புழல் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் மாலினிக்கு தெரிந்த நபரே இந்த கொலையை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கொலையாளிகள் நகையை மட்டும்தான் அபகரித்து சென்றுள்ளனர். வேறு எந்த பொருளும் திருடப்பட வில்லை. எனவே கொலையை திசை திருப்புவதற்காக அவன் நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மாலினி கடந்த 5 வருடமாக அங்கு அழகுநிலையம் நடத்தி வருகிறார். பெண்கள் அழகு நிலையம் என்பதால் ஆண்கள் யாரும் அங்கு வருவதில்லை. ஆண்கள் யாராவது கடைவாசலில் நின்றால் கூட மாலினி சத்தம் போடுவாராம். அப்படியிருக்க அன்னியர் யாராவது கடைக்குள் புகுந்தால் மாலினி கூச்சல் போட்டு இருப்பார். இதனால் நன்கு அறிமுகமான ஒருவர் தான் இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாலினியின் கணவர் நண்பர் திருமண விழாவில் பங்கேற்க மானாமதுரை சென்று உள்ளார். மனைவி கொலை செய்யப்பட்டு இருப்பது அவருக்கு தெரி விக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னைக்கு விரைந்து வந்தார்.
இதற்கிடையே அழகு நிலையத்தில் இருந்த மாலினி செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கொலைக்கு முன்பாக கணவரை தவிர வேறு ஒரு நம்பரில் மாலினி 3 முறை பேசியுள்ளார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications