அடுத்து எங்கள் ஆட்சிதான், தொலைத்துவிடுவேன்.. கேள்வி கேட்ட பொதுமக்களை மிரட்டிய அமைச்சர்
சேலம்: தொகுதியில் சாலை சரியில்லை என்று கூறிய பொதுமக்களை பார்த்து 'ஓவரா சத்தம் போட்டால் தொலைத்து விடுவேன்,' என, அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த சூரப்பள்ளியில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நூற்றுக்கணக்கான, அதிமுகவினருடன் நேற்று மாலை, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

சூரப்பள்ளி, கடைக்காரன்வளவில், அமைச்சர் ஓட்டு சேகரித்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த சில பொதுமக்கள், நீங்கள் வந்த சாலையே, எப்படி மோசமாக இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்து கொண்டு, ஐந்து ஆண்டுகளாக இந்த பகுதிக்கு வரவில்லை. ஓட்டு கேட்க மட்டும் வந்துவிட்டீர்களே என கோஷமிட்டனர்.
தனபால், என்பவர் தயவு செய்து எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்க வராதீர்கள் எனக் கூறி, கோஷமிட்டபடி அமைச்சரின் பிரசார வாகனம் முன் ஓடினார்.
இதை பார்த்ததும் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவரை சரமாரியாக தாக்கினர். போலீசார் மீட்டு அனுப்பினர்.
இதை பார்த்த பழனிசாமி, 'நெடுஞ்சாலைகளை மட்டும் தான் நான் போட முடியும். இங்கே சத்தம் போடும் உன் ஓட்டு, எனக்கு தேவையில்லை. அடுத்து எங்கள் ஆட்சி தான் வரப்போகுது. ஓவரா சத்தம் போட்டால் தொலைத்து விடுவேன்' என மைக்கிலேயே மிரட்டினார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications