இன்னும் "குணா" கேரக்டராகவே இருக்காரே கமல்.. ஜெயக்குமார் கிண்டல்!
நடிகர் கமல்ஹாசன் கற்பனை உலகத்தில் வாழ்ந்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை : நடிகர் கமல்ஹாசன் இன்னமும் கற்பனையான குணா கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு குறித்து கருத்து தெரிவித்தால் அதற்கு முதல் ஆளாக வந்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது அமைச்சர் ஜெயக்குமார்தான்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரெய்டு நடைபெற்றது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன குற்றம்
கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் குற்றவாளிகள் நாடாளக் கூடாது, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என்று நடிகர் கமல் கூறியது கண்டனத்துக்குரியது. குற்றம் இருப்பது கண்டுபிடித்தால் எங்களிடம் கூறுங்கள் நாங்கள் திருத்திக் கொள்கிறோம். நாங்கள் சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை என்றால் அதற்காக லஞ்ச ஒழிப்பு துறை, நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டம் என பல்வேறு விஷயங்கள் உள்ளன.
முதும்பெலும்பு வந்துவிட்டதா?
கற்பனையான குற்றச்சாட்டை நடிகர் கமல்ஹாசன் முன்வைத்திருப்பதை ஏற்க முடியாது. யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டை வைத்து விடலாம்.ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும். ஜெயலலிதா இருந்த போது வாயை மூடிக் கொண்டு நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று கூறிய கமலுக்கு இப்போது முதுகெலும்பு வந்தது எப்படி?
கமல்ஹாசன் செயல்பாடு
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதிலிருந்தே கமல் யாருடைய கைப்பாவையாக இருந்து வருகிறார் என்பது தெரியவருகிறது. கடந்த காலங்களில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் கல்யாணகுமார் கேரக்டரை போல் இருந்தார். தற்போது குணா கேரக்டரில் கற்பனையிலேயே வாழ்ந்து வருகிறார்.
உப்பு போட்டு உண்கிறோம்
கமல்ஹாசன் கற்பனையை விட்டு விலக டுவிட்டரை விட்டு வெளியே வரவேண்டும். நாங்கள் உப்பு போட்டு சாப்பிடுவதால் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டிய கமல் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதோ ஆராய்ச்சி மணி அடிக்க வேண்டும் என்கிறார்.
சங்க காலத்தில
ராஜாக்கள் ஆண்ட காலத்தில்தான் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்பதால் ஆராய்ச்சி மணியை அடித்து வந்தோம். ஆனால் தற்போது புகார் கொடுக்க பல்வேறு அமைப்புகள் இருந்து வரும் நிலையில் இன்னமும் கமல் சங்க காலத்திலேயே இருக்கிறார்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம்
தினகரனும் திவாகரனும் ஜெயலலிதா மீது குறை சொல்வதன் மூலம் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கின்றனர். சசிகலா, தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் சந்தர்ப்பவாதிகள். அவர்கள் கொள்ளையடித்த சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். நயவஞ்சகம் கொண்ட நாக்கின் மூலம் ஜெயலலிதாவை தவறாக பேசுகிறார்கள். என்ன நெஞ்சழுத்தம் இருக்கும். இவர்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.