"மணி 9.10 ஆச்சு! டாக்டர் வரலையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீர் ஆய்வு.. விழிபிதுங்கிய மருத்துவமனை
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியன், அங்கு பணிக்கு வராத ஒரு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா சுப்பிரமணியன். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் திண்டுக்கல், வத்தலகுண்டு நோக்கி பயணித்தார்.
அப்போது வாடிப்பட்டி அருகே திடீரென காரை நிறுத்த சொன்னார். வாடிப்பட்டிக்கு செல்லும் வழியில் 4 வழிச்சாலை அகில்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காரை செலுத்த சொன்னார். உடனே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அமைச்சர் மாசுவை வரவேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் படுகொலைகள்- அமித்ஷா ராஜினாமா செய்ய கோருவது பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி!
மருத்துவமனை ஆய்வு
இதையடுத்து மருத்துவமனையை பார்வையிட்டார். நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் வருகை பதிவேட்டை கேட்டார். அப்போது அங்கு பணிக்கு வரவேண்டிய மருத்துவர் பூபேஷ் குமார் எந்த தகவலையும் கொடுக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மணி ஆகிடுச்சி
"மணி 9.10 ஆகிவிட்டது, இன்னும் ஏன் டாக்டர் வரவில்லை. இன்று மட்டும்தான் லேட்டாக வருகிறாரா, இல்லை தினந்தோறும் இப்படிதான் லேட்டாக வருகிறாரா" என கேட்டார் அமைச்சர். உடனே அந்த இடத்திலேயே மருத்துவ அதிகாரிகளுக்கு போன் போட்டார் அமைச்சர் சுப்பிரமணியன்.
2 மணி நேரம் லேட்
அப்போது அவர் "டாக்டர் பூபேஷ்குமார் நேற்று லீவு எடுத்துள்ளார். இன்னிக்கு 2 மணி நேரமாக லேட்டாக வருவதாக வாய்மொழியாக கூறியுள்ளாராம். நேற்று லீவு எடுத்தவருக்கு இன்று லேட்டாக வர லெட்டர் கொடுக்க வேண்டியதுதானே. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் இங்கு இரு மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
இன்னொரு டாக்டர் வேண்டும்
ஒருவர் இன்னும் வரவில்லை, இன்னொருவர் பணிமாறுதலால் சென்றுவிட்டார், எனவே ஒரு டாக்டரை இங்கு மாற்றமுடியுமா என பாருங்கள் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார். கொரோனா தடுப்பூசி கேம்ப் எத்தனை நடக்கிறது என்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகள் குறித்தும் அதன் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். அமைச்சரின் வருகையால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.