எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறு- அமைச்சர் மாஃபா கண்டனம்
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறானதாகும் என்று விஜயேந்திரருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தேசிய கீதத்துக்கு கொடுக்கும் மரியாதையை தமிழ்த் தாய் வாழ்த்துக்கும் தராமல் அதை அவமதிப்பது தவறான செயலாகும் என்று விஜயேந்திரருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது.
அப்போது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் அவர் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழா முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் தமிழ்த் தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று சங்கர மடம் சார்பில் அளித்துள்ள விளக்கத்துக்கும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன. இந்நிலையில் அவரது இந்த செயலுக்கு தமிழக அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விஜயேந்திரர் விவகாரம் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்
தேசிய கீதத்திற்கு தரும் மரியாதையை தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ம் கட்டாயம் தர வேண்டும்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறானதாகும்.
விஜயேந்திரர் செய்த செயல் தவறான முன்னுதாரணமாகும். தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அவர் எழுந்து நிற்காததற்கு உடல்நிலை பாதிப்புக் கூட காரணமாக இருந்திருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே தனிப்பட்ட முறையில் விஜயேந்திரரை விமர்சிக்க விரும்பவில்லை. இந்த செயல் கண்டனத்துக்குரியது என்றார் மாஃபா பாண்டியராஜன்.