கருணாநிதியின் வாழ்க்கை பள்ளி பாடமாக சேர்க்கப்படுமா- அமைச்சர் அளித்த "திடுக்" பதில்
சென்னை: திமுக கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் வாழ்க்கை பாடமாக சேர்க்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் பதிலளித்தார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவர் உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர். 14 பிரதமர்களுடனும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
அரசியல் மட்டுமல்லாது அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஏராளம். இந்நிலையில் கருணாநிதியின் நூல்கள் அரசுடமை ஆக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் கருணாநிதியின் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வந்தால், அரசு ஆவன செய்யும்.
கருணாநிதியின் படைப்புகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதிமுக அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்றார் மாஃபா பாண்டியராஜன். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்த இந்த அரசு பாடப்புத்தகத்தில் மட்டும் இடம் கொடுக்குமா என்று மக்கள் கருதினர். எனினும் மாஃபாவின் பதில் அவர்களை திடுக்கிட வைத்துவிட்டது.