பணம்தானே முக்கியம்... தே.மு.தி.கவை ஏலம் விட்டு கூட்டணி வையுங்க- விஜயகாந்த் மீது 'நத்தம்' தாக்கு!!
நத்தம்: பணத்துக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் விஜயகாந்த் தம்முடைய தே.மு.தி.க.வை பேசாமல் ஏலம் விட்டுவிட்டு யார் அதிக தொகை கொடுக்கிறார்களோ அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமே என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடுமையாக சாடியுள்ளார்.
பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க, மக்கள் நலன் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி ரகசியமாக கூட்டணி பேசுவார்த்தையை நடத்தி வருகிறது தே.மு.தி.க. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு மாதிரி நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
ஆனால் எந்த கட்சியால் அதிக பணம், அதிக தொகுதிகள் கொடுக்க முடியுமோ அந்த கட்சியுடன்தான் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில் கட்சி நடத்துவதை ஒரு பிசினஸாகத்தான் செய்கிறார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நல கூட்டணி ஆகியவற்றுடன் விஜயகாந்த் கூட்டணிக்காக பேசி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சம் பணம்தான். அதன் பிறகு தொகுதிகள்.
இப்படி பணத்துக்கக அலையும் விஜயகாந்த், தே.மு.தி.க.வை பொது ஏலத்தில் விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமே..
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.