கட்சி, ஆட்சியை காப்பாற்ற எந்த தியாகமும் செய்யத் தயார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்றும் இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மதுரை: ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மதுரை ஆவின் பால் பண்ணையில் ரூ.96 கோடி மதிப்பில் புதிய ஐஸ் கிரீம் தொழிற்சாலை மற்றும் நறுமணபால் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, ஆவின் தலைவர் தங்கம், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது.
கட்டுப்பாட்டோடு காத்திருக்கிறோம். உத்தரவு கிடைத்தால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முறியடிப்போம். சிலர் எங்கள் கட்சிக்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். நாங்கள் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும். ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம் என்றார்.