காவிரி கரையோரம் நின்று யாரும் செல்பி எடுக்க கூடாது.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை
காவிரி கரையோரங்களில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உதயகுமார் கூறினார்.
சென்னை: காவிரி ஆற்றின் வெள்ளத்தில் நின்று கொண்டு செல்பி எடுப்பது, மீன்பிடிப்பது போன்ற வேலைகளில் எல்லாம் யாரும் ஈடுபட கூடாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர். திருச்சி, கடலூர், நாமக்கல், தஞ்சை, நாகை, அரியலூர், திருவாரூர் இவையெல்லாம் காவிரி கரையோர மாவட்டங்கள் ஆகும்.
எச்சரிக்கை அறிவிப்பு
கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பி, அவை தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி நிரம்பி வழிந்து ஓடுகிறது. இதனால் மேற்கூறிய 11 கரையோர மாவட்டங்களுக்குக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுத்தார்கள்.
செல்பி எடுக்க கூடாது
இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி நதி நீர் கால்வாய்களில் நீர் அதிக அளவு வெளியேறும்போது, செல்பி எடுத்தல், நீச்சல் அடித்தல் மீன்பிடித்தல் என இதுபோன்ற பொழுதுபோக்கு நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என 11 மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
விவசாயிகளுக்கு அறிவுரை
அதேபோல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றங்கரையில் குளிக்க வைக்க, விளையாட அனுமதிக்க கூடாது எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வதந்தி பரப்ப கூடாது
பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சேலம், ஈரோடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார். மேலும் வெள்ளம் தொடர்பாக யாராவது வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எனஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.