அமைச்சர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் படுகாயம்
கரூர்: கரூரில், போக்குவரத்து துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற காவலர் வாகனம் மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
கரூரில் போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தாநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்தநிலையில், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரம் செய்யும் ராஜீ (55) என்பவர் கரூர் - கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப செல்ல முற்படும் போது போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் பாதுகாப்பிற்கு வந்த எஸ்கார்ட் வாகனம், ராஜு மீது மோதி விட்டது.
இதில் கீழே விழுந்த ராஜு படுகாயமடைந்தார். ஆனால் எஸ்கார்ட் வாகனம் நிற்காமல் போய் விட்டது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் ராஜுவை மீட்டு கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து ராஜு கூறுகையில், பாதுகாப்பிற்காக செல்லும் அமைச்சரின் காலவர்கள் என்னை போன்ற ஏழை எளிய மக்களையும் கருத்தில் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டும். சற்று சுதாரித்ததால் இன்று உயிர் பிழைத்தேன். இல்லையென்றால் என்னை நம்பியுள்ள எனது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்திருக்கும் என்றார் வேதனையுடன்.