லஞ்சப் புகார் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓட்டம்பிடித்த அமைச்சர் சரோஜா!
லஞ்சப் புகார் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைச்சர் சரோஜா ஓட்டம்பிடித்துள்ளார்.
சென்னை: சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் இன்று செய்தியாளர்கள் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் சொல்லாமல் தலையை குனிந்தபடியே அவர் ஓட்டம் பிடித்தார்.
அமைச்சர் சரோஜா மீது தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி லஞ்சப் புகார் கூறினார். 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் பணியில் நீடிக்க முடியும் என மிரட்டியதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடமும் அமைச்சர் சரோஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கேட்டு மிரட்டிய அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் மாநாடு
இந்நிலையில் சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.466 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சரோஜா
தமிழகத்தில் மொத்தம் 11,89,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான தங்கு தடையின்றி நடந்து வருவதற்கு எந்த வகையில் பாதிப்பு அடைந்திருக்கிறார்களோ, அந்த வகையில் எந்த உதவி தேவையோ அதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்தார்போல் அனைத்து உபகரணங்களையும் நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று பேசினார்.
கேள்வியே கேட்க விடவில்லை
செய்தியாளர்களை கேள்வியே கேட்கவிடாமல் தொடர்ந்து அவர் பேசினார். தனது பேட்டியை முடித்த அவர் அவசர அவசரமாக கிளம்பினார்.
பதில் சொல்லாமல் ஓட்டம்
அப்போது செய்தியாளர்கள் ராஜ மீனாட்சியின் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் சொல்ல மறுத்த சரோஜா தலைகுனிந்தபடியே ஓட்டம் பிடித்தார்.