செல்லூர் ராஜு செயல்பாடு சரியில்லை.. மாறுவேடத்தில் ஓபிஎஸ் அணிக்கு தாவிய எம்எல்ஏ சரவணன்!
செல்லூர் ராஜுவின் செயல்கள் சரியில்லை என ஓபிஎஸ் அணி ஆதரவு அதிமுக எம்எல்ஏ சரணவனன் தெரிவித்துள்ளார்.
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜுவின் செயல்பாடுகள் சரியில்லை என ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார். மக்களுக்காக தான் கூவத்தூரில் இருந்து ஓடி வந்ததாக கூறிய அவர், தன்னை யாரும் மிரட்ட முடியாது என்றார்.
சசிகலாவின் அதிகார ஆசையால் பிளவு பட்ட அதிமுகவில் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தடுக்க திட்டம்போட்ட சசிகலா குரூப் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் 10 நாட்களுக்கும் மேலாக எம்எல்ஏக்களை அடைத்து வைத்தது.
அங்கு எம்எல்ஏக்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 13ஆம் தேதி இரவு மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் அங்கிருந்து தப்பி வந்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும் தான் மாறுவேடத்தில் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொகுதியில் உற்சாக வரவேற்பு
இந்நிலையில் இன்று அவர் தனது தொகுதிக்கு சென்றார். அப்போது அத்தொகுதி மக்கள் மற்றும் அதிமுகவினர் எம்எல்ஏ சரவணனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,
நான் யாரிடமம் பணம்,நகை,கார் வாங்கல
நான் யாரிடமும் பணம், நகை, கார் எதுவும் வாங்கவில்லை. இதனை நிரூபிக்க நான் தயார். கொடுத்தேன் என்பவர்கள் நிரூபிப்பார்களா?
யாரும் மிரட்ட முடியாது
மக்களுக்காக தான் நான் கூவத்தூரில் இருந்து ஓடி வந்தேன். என்னை யாராலும் மிரட்ட முடியாது. நான் மக்களில் ஒருவன்.
செல்லலூர் ராஜு செயல்கள் சரியில்லை
என்னை உருவாக்கியவர் செல்லூர் ராஜு. அவருடைய செயல்கள், போகும் பாதைகள் சரியில்லை. அதனால் தான் நான் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்தேன். இவ்வாறு எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களிடம் பேசினார்.