மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து... அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு நடத்தியுள்ளார்.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பிரசத்தி பெற்ற கோவில்களில் தீத்தடுப்பு கருவிகள் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம்கால் மண்டபம் அருகே நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவிலுக்குள் செயல்பட்டு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.
4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தீத்தடுப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.