அண்ணாமலை உருண்டு புரண்டாலும்.. தமிழகத்தில் அது மட்டும் நடக்காது.. அமைச்சர் சிவசங்கர் 'பளிச்' பதிலடி!
பெரம்பலூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எவ்வளவு தான் உருண்டு புரண்டாலும் தமிழக மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தாம் எதைச் செய்தாலும் அதை மக்கள் பார்க்க வேண்டும் என்ற விளம்பர மோகம் கொண்டவர் அண்ணாமலை என்றும் முதல்வரை பற்றி அவர் பேசலாமா எனவும் வினவியுள்ளார்.
அண்மையில் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பர மோகத்தில் இருப்பதாக குற்றஞ்சாட்டி விமர்சித்திருந்தார்.

திமுக -பாஜக
கடந்த சில மாதங்களாகவே திமுக -பாஜக இடையேயான வார்த்தைப் போர் முற்றி வருகிறது. அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்றாலும் கூட பாஜக தன்னை பிரதான எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார். இது வரை அமைச்சர்களை மட்டுமே விமர்சித்து வந்த அவர் இப்போது முதலமைச்சரையும் விட்டு வைக்கவில்லை.

அமைச்சர் சிவசங்கர்
முதல்வர் ஸ்டாலின் விளம்பர மோகம் கொண்டவர் என்றும் லவ் டுடே திரைப்படம் பார்க்க நேரம் இருக்கும் போது மழை வெள்ள பாதிப்புகளை பார்க்க நேரமில்லையா எனவும் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அண்ணாமலை எவ்வளவு தான் உருண்டு புரண்டாலும் தமிழக மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள் எனவும் பாஜக பக்கம் மக்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலைக்கு ஆதங்கம்
மேலும், தன்னை மக்கள் கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் அண்ணாமலை இது போன்ற பிதற்றல்களில் ஈடுபடுவதாகவும் தாம் எதைச் செய்தாலும், எதை பேசினாலும் மக்கள் தன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை இவ்வாறெல்லாம் பேசி வருகிறார் என சாடினார். முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அவருக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளம்பர மோகம் இன்றி மக்கள் பணியாற்றி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் மெய்யநாதன்
இதனிடையே அமைச்சர் மெய்யநாதன் தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். 122 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏராளமான சேதாரங்கள் ஏற்பட்டுள்ள போதும் குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்காதவர் தான் பிரதமர் மோடி என அவர் பங்குக்கு சாடியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications