அந்த 2 அமைச்சர்களால்தான் அத்தனை பிரச்சினையும்.. தகிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்!
ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியே என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
புதுச்சேரி : நன்றாக போய்க்கொண்டிருந்த ஆட்சியில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தங்கத் தமிழ்ச்செல்வன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நேற்று தொகுதியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம், மக்கள் எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு அளித்தனர்.
மக்கள் சக்தி
இது தான் உண்மையான மக்கள் சக்தி, மக்கள் துணை பொதுச்செயலாளர் தினகரன் தான் கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டியிருக்கின்றனர், ஆனால் 22 எம்எல்ஏக்களான எங்களுக்கு அழைப்பு இல்லை.
ஆதரவு பெருகுகிறது
இன்று மாலைக்குள் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள். தினகரன் நாளை புதுச்சேரி வர வாய்ப்பு உள்ளது, ஆளுநர் நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாவிட்டால் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம்.
தினகரன் விருப்பம்
இந்த ஆட்சி நல்லமுறையில் நடக்க வேண்டும் என்றே தினகரன் விரும்புகிறார். சபாநாயகர் தனபால் மூத்த நிர்வாகி, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா என்று அனைவருக்கும் விசுவாசமாக இருப்பவர். அவர் முதல்வராக இருப்பது நல்லது தானே, அவர் முதல்வராக வரட்டும்.
இரு அமைச்சர்கள்
இந்த அரசு நல்ல முறையில் தான் சென்று கொண்டிருந்தது, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் சைலண்ட் கிள்ளர்கள் போல தப்பான வழிகாட்டுதலை காட்டுகின்றனர். யாருடைய மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம், 2 அமைச்சர்கள் எங்களது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தான் இங்கே தங்கியிருக்கிறோம், இந்த ஆட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும், சசிகலா தலைமையை நிலைநாட்ட வேண்டும், என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.