சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை : அமைச்சர் வளர்மதி தகவல்
சென்னை: சென்னையில் கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னை மாநகரில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் தேங்கிய 289 இடங்களில், 253 இடங்களில் தண்ணீர் வெளியேற்றபட்டது.

செம்பரப்பாக்கம் ஏரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கூவம், கொசஸ்தலம், அடையாறு கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மழையினால் பாதிக்கப்பட்ட 25,595 மக்கள் 40 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மழை வெள்ளத்தில் 7 குடிசை வீடுகள் முழுமையாகவும், 48 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது
முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், வேஷ்டி, சேலை மற்றும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4 ஆயிரம் ரூபாய், வேஷ்டி, சேலை, 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மழை நிவாரணப் பணிகளில் எந்த தொய்வில்லாமல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. மீட்பு பணி குறித்து விரைவில் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications