அவருகிட்ட 100 கோடி சொத்து இருக்கு.. அம்மாகிட்ட இருந்தா தப்பா? அமைச்சர் எசகுபிசகு பேச்சு
சென்னை: அதிமுக நகர செயலாளர் ரூ.100 கோடி சொத்து வைத்துள்ளார் என்று பொது மேடையில் அமைச்சர் வீரமணி பேசியது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பேச்சின்போது, பொதுச்செயலாளரிடம் (ஜெயலலிதா) ரூ.66 கோடி இருக்காதா..? என்றும் நகர செயலாளரோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் வீரமணி.
அதிமுக தனது நான்காண்டு அரசின், 'சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை' தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சர் கே.சி.வீரமணியும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் அதில் பங்கேற்றனர்.

அதிர்வலை
அந்த கூட்டத்தில் வீரமணி பேசிய பேச்சு, போயஸ் கார்டன் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர் அதிமுகவினர். சொந்த கட்சிக்காரரின் சொத்துக்குவிப்பு பற்றி பேசிய வீரமணி, அதை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொத்துக்களோடு ஒப்பிட்டும் பேசியுள்ளதே இதற்கு காரணம்.

சாதாரணம்
கூட்டத்தில் வீரமணி பேசுகையில் "என்ன தவறு செய்தார் எங்க தலைவி? அம்மாவை நேரடியாக எதிர்க்க முடியாத எதிர்க் கட்சிகள் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் போட்டு முடக்கலாம்னு பார்க்கிறார்கள். அம்மாவுக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக பிரசாரம் செய்கிறார்கள். இன்றைக்கு 100 கோடி சொத்து என்பது சர்வசாதாரணம்.

அவருக்கு இருக்கு
இந்த மேடையில இருக்குற பல பேருக்கு நூறு கோடிக்கு மேல சொத்து இருக்கிறது. நகரச் செயலாளர் பழனிக்கு நூறு கோடி சொத்து இருக்கிறது. நகரத் தலைவர் அமுதாவுக்கு நூறு கோடி சொத்து இருக்கிறது. பாலசுப்ரமணி, மதியழகன்னு எல்லாருக்கும் பல கோடி சொத்து இருக்கு. எங்களுக்கே இருக்கும்போது அம்மாவுக்கு இருக்கக் கூடாதா?

அம்மாகிட்ட இருக்கும்
அம்மா, பிறந்ததே பணக்கார குடும்பத்துல. மேலும் நிறைய சினிமாக்களில் நடித்துள்ளார். அவரிடம் ரூ.66 கோடி இருக்காதா? என பேசியுள்ளார் வீர்மணி. இது மேடையில் இருந்த பழனியையும், அமுதாவையும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

உண்மையை உடைத்தாரா?
நகர செயலாளர் பழனி, ஆட்டோ டிரைவராக இருந்து கட்சியில் பதவிக்கு வந்தவர். அவருக்கு 100 கோடி சொத்து இருப்பதாக வீரமணி சொன்னதைக் கேட்டதும், கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு ஐயப்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. கூட்டத்தில் முணுமுணுப்பு சத்தம் ஒலித்தது.

கார்டனுக்கு ரிப்போர்ட்
வீரமணி இப்படி பேசுவது புதிதில்லை. முன்பு ஒரு கூட்டத்தில் பேசும்போது, தனக்கு, ரூ.200 கோடி சொத்திருப்பதாக கூறியிருந்தார். ஆனால் இம்முறை, அதிலும் சொந்தக் கட்சிக்காரர் சொத்துக்குவித்திருப்பதாக மிக சாதாரணமாக கூறியுள்ளார் வீரமணி. மேலும், ஜெயலலிதாவுடனும் அதை ஒப்பிட்டுள்ளார். எனவே அவருடைய பேச்சை கார்டனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள், ஆகாதவர்கள். இந்நிலையில், தான், ரூ.100 கோடி என கூறவில்லை எனவும், பல கோடி என கூறியதாகவும், அமைச்சர் தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications