செம்மலை சென்றது ஓபிஎஸ் மீதுள்ள பாசத்தால் அல்ல.. எம்.ஆர். விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு
செம்மலை எம்எல்ஏ ஓபிஎஸ் அணிக்கு சென்றது அவர் மீதுள்ள பாசத்தால் அல்ல என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர்: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தால் ஏற்க மாட்டேன் என்று கூறித்தான் செம்மலை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, ஜெ.தீபா அணி ஆகிய மூன்று பிரிவுகளாக கட்சியினர் செயல்படுகின்றனர். ஆனால், தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை.
அதனால், தொண்டர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில், மூன்று அணியினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஜெயலலிதா பிறந்தநாளை அதிமு கவினர் மூன்று அணியாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசியதாவது: இன்று அதிமுகவுக்கு எதிர்க்கட்சி திமுக அல்ல. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் தான். சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் அமைதி காத்ததால்தான் அதிமுக அமைந்தது. கருவறை முதல் கல்லறை வரை திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு.
ஓ.பி.எஸ்.அணியில் இருக்கும் எம்.எல்.ஏ செம்மலை, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தால் ஏற்க மாட்டேன் என்று கூறித்தான் அங்கு சென்றாரே தவிர ஓ.பி.எஸ் மேல் உள்ள பாசத்தால் அல்ல. அது போலவே மற்ற எம்.எல்.ஏக்களும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஓ.பி.எஸ் அணிக்கு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிமுக எம்எல்ஏ செம்மலை எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வருக்கான தகுதியில்லை என்றும், மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் அதரவில்லை என்றும் கூறியிருந்தார்.