அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவபொம்மை எரிப்பு...புதுக்கோட்டையில் பதற்றம் !
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவ பொம்மையை எரித்து முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள் சொக்கலிங்கத்திடம் சாதியை இழிவுபடுத்திப் பேசியதாக முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் எனக் கூறி போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட அதிமுக அலுவலகம் மீது ஆர்ப்பாட்டம் நடந்த வந்தவர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலை மறியல் செய்தனர். மேலும், மரங்களை வெட்டி சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி வீட்டிற்கு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே கூடி நின்று அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எனவே மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.