ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்ல திணறிய 2 நர்ஸுகள் மீது நடவடிக்கை
ஈரோடு: தனது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ஈரோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 நர்ஸுகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டு வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை ஈரோட்டில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தாய், சேய் பிரிவில் இருந்த பெண்களிடம் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொண்டார்.
அப்போது பணியில் இருந்த 2 நர்ஸுகளிடம் பிரசவம் ஆன பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் எப்பொழுது கொடுக்கப்படுகிறது உள்பட பல கேள்விகளை கேட்டார். அதற்கு அந்த 2 நர்ஸுகளும் பதில் கூற முடியாமல் திணறினர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் இதை எல்லாம் கவனிக்காமல் இருந்த மருத்துவமனை சூப்பிரண்டு ராஜேந்திரனை இடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள குறைகள் 10 நாட்களில் சரி செய்யப்படும். தமிழகத்தில் 1000 குழந்தைகளுக்கு 21 குழந்தைகள் இறக்கின்றன. ஈரோட்டில் 1000 குழந்தைகளுக்கு 6 குழந்தைகள் இறக்கின்றன. ஈரோடு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications