விஜயபாஸ்கர் தந்தையும் சகோதரரும் ஐடி அலுவலகத்தில் ஆஜர்.. சிக்கிய ஆவணங்கள் பற்றி கிடுக்குப்படி கேள்வி
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி மற்றும் சகோதரர் உதயகுமார் ஆகியோர் திருச்சி உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.
திருச்சி: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை சின்னதம்பி மற்றும் சகோதரர் உதயகுமார் இருவரும் திருச்சியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் சின்னதம்பி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீடு, அலுவலகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை மற்றும் இலுப்பூரில் உள்ள வீடுகளில் இன்று விடியற்காலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சோதனையின் போது பல்வேறு ரகசிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

2 பெட்டி ஆவணங்கள்
புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூர் உள்ள விஜயபாஸ்கரின் பெற்றோர் வசித்த வீட்டில் நடைபெற்ற வருமானவரிச் சோதனையில் 2 பெட்டிகள் நிறைய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சம்மன்
கைப்பற்றப்பட்ட மற்ற ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் வருமானவரித் துறையினர் அமைச்சரின் தந்தைக்கு சம்மன் அனுப்பினர். திருச்சியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் இன்று வர வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஆஜர்
இதனைத் தொடர்ந்து இன்று திருச்சியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு விஜயபாஸ்கர் தந்தை சின்னதம்பி மற்றும் அவரது சகோதரர் உதயகுமார் ஆகிய இரண்டு பேரும் நேரில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் நேற்று கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கிடுக்குப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.

விசாரணை
இதனிடையே வருமானவரித் துறை அலுவலகத்திற்கு வந்த சின்னதம்பி, செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர் என்று கூறினார். மேலும் அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உரிய பதில் அளிப்பேன் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications