தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா, எங்கேருந்து பஸ் ஏறலாம்... அரசின் ஸ்பெஷல் ஏற்பாடு!
தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்தகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 11, 645 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் இருந்து 5 இடங்களில் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அண்ணா நகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ஈசிஆர் வழியாக புதுவை, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள்சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.
விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லும். வேலூர், ஆரணி, ஆற்காடு, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும்.

முன்பதிவு பேருந்தில் எங்கே ஏறலாம்?
பிற ஊர்களுக்கான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை அவுட்டர் ரிங் ரோடு வழியாக வண்டலூரை சென்றடைந்து அங்கிருந்து ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்ற வழி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் மக்கள் அக்டோபர் 15 முதல் 17 வரை தாம்பரம், பெருங்களத்தூர் வழியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் சென்றால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

பீக் ஹவரில் வரத் தடை
கனரக வாகனங்கள் அக்டோபர் 15 முதல் 17 வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரையுள்ள பகுதிகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாள்தோறும் 6,825 பேருந்துகள் இயக்கப்படுகின்றன, தீபாவளிக்காக 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஊர் திரும்பவும் சிறப்பு பேருந்துகள்
பிற ஊர்களில் தீபாவளி பண்டிகைக்காக 11,111பேருந்துகள் இயக்கப்படகின்றன. தீபாவளிக்குப் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை வர 3,794 பேருந்துகள் அக்டோபர் 19 முதல் 22 வரை இயக்கப்படுகின்றன. மற்ற ஊர்களுக்கு 7,443 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதிக கட்டணம் கூடாது
பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் நிச்சயம் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications