அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் வார்த்தைகளை விடக்கூடாது.. என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசுங்க: ஜி.கே.வாசன்
கோவை : அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும் என்றும், பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோவை சின்னியம்பாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரமாக இருந்து வருகிறார். மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும். எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காக்கக்கூடாது.
பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது. அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் வைத்திலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications