மிசா மதிவாணன் மறைவு! திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!
சென்னை: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து, தாம் மிகவும் வருந்தியதாக உருக்கமுடன் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மிசா.பி.மதிவாணன் மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''மிசா.பி.மதிவாணன், 1973-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னாளில் செம்பனார்கோவில் ஒன்றியக் கழகத்தின் பொறுப்பாளராகவும் 2003 வரை கழகப்பணியாற்றியவர்.

பின்னர் தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் என மேலும் பல்வேறு கழகப் பொறுப்புகளைச் சிறப்புற வகித்தவர்.
1993-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைக் கழகத் தலைவராக முன்மொழிந்தவர்களில் திரு. மிசா. பி. மதிவாணன் அவர்களும் ஒருவர் ஆவார்.
இவற்றை எல்லாம் விட, 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், மிசா காலக்கட்டத்தில் ஓராண்டு சிறைவாசமும் அனுபவித்த பெருமைக்குரிய கழகப் போராளி ஆவார்.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழகத்தின் முப்பெரும் விழாவை, மூன்று நாட்கள் விழாவாக நடத்திப் பெருமை சேர்த்தவர். கழகத்துக்கு இவர் ஆற்றிய பெரும்பணிகளுக்கான அங்கீகாரமாக, பெரியார் விருது பெற்றவர்.
இத்தகைய பெருமைகளுக்குரிய கழக முன்னோடி திரு. மிசா.பி. மதிவாணன் அவர்களின் மறைவு, கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கழக வரலாற்றில் அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications