அமைச்சர் விஜயபாஸ்கரின் பிரச்சார வாகனம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு: 3 பேர் காயம்
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் பிரச்சார வாகனம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கினர். இதில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 3 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அவர் முத்தரையர் சமூகத்தினரை கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் இந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற துடிப்போடு உள்ளனர் முத்தரையர் சமூகத்தினர்.
அவர்களை சமாளிக்கும் விதமாக விஜயபாஸ்கர் தனது 8 வயது மகள், மனைவி, அக்காவோடு பிரச்சாரம் செய்து வருகிறார். சிறுமி தனது தந்தைக்காக வாக்கு சேகரிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயபாஸ்கர் நரியப்பட்டு கிராமத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு காரில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் விஜயபாஸ்கரின் காரை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் விஜயபாஸ்கரின் காருக்கு பின்னால் பாதுகாப்புக்காக வந்த காரின் மீது கற்கள் பட்டு கண்ணாடிகள் உடைந்தன. மேலும் காரில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகிறார்கள்.