மிசன் 234: ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்- அதிமுக கனஜோர்
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் வெல்லவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள அதிமுக, சத்தமில்லாமல் சட்டசபை தேர்தலுக்கு தயாராகிவிட்டது. ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்' முழக்கத்துடன் ‘மிசன் 234' திட்டத்தினை முழு முனைப்புடன் செயல்படுத்த தயாராகிவிட்டது.
தமிழகத்தில் உள்ள 5 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 547 வாக்காளர்களையும் சந்திக்க, 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு வாக்கு சேகரிப்பாளரை நியமிப்பதோடு அவர்களை கவரும் வகையில் பேச பயிற்சி அளிக்கப் போகிறார்களாம்.

எதிர்கட்சிகள் தயார்
2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றனர். அன்புமணி ராமதாஸை முதல்வராக அறிவித்துள்ள பாமக மண்டல மாநாடுகள் நடத்துவதோடு, மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி என இணையத்தில் கலக்கி வருகிறது.

விஜயகாந்த் மக்கள் பணி
தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘மக்களுக்காக மக்கள் பணி' என தொடங்கி, ஊர் ஊராக போய் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, அதிமுக, திமுகவிற்கு எதிராக பேசி வருகிறார். கருப்பின தலைவர் மார்ட்டின் லூதர் கிங், என்றாவது ஒரு மாற்றம் வரும். அது எங்கிருந்து வேண்டும் என்றாலும் தொடங்கும் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தே.மு.தி.க.வால் தான் ஏற்படும். கருப்பாக இருப்பவர்கள் தான் மேலே இருப்பார்கள் என்றும் பேசி வருகிறார்.

ஸ்டாலின் பயணம்
‘நமக்கு நாமே' பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், தமிழகம் முழுவதும் ‘முடியட்டும் விடியட்டும்.. என முழக்கமிட்டு வருகிறார். ஆளும் கட்சிக்கு எதிராக புகார்களை அடுக்கி வருகிறார்.

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம்
வைகோ தலைமையிலான மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தினரும் அவ்வப்போது போராட்டம், ஆர்பாட்டம் நடத்தி மக்களை கவர முயற்சி செய்து வருகின்றனர். ஆளும் அதிமுக, திமுகவிற்கு எதிராக ஊழல் புகார்களை அடுக்கி வருகிறார் வைகோ.

கூட்டணி பேச்சு வார்த்தை
என்னதான் தனித்தனியாக களமிறங்கினாலும் எதிர்கட்சிகள் பலரும் ரகசியமாக கூட்டணி பேரத்திலும் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. யாருடன், யார் கூட்டணி சேருவார்கள் என்று எதையுமே கணிக்க முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு 6 மாதம் மட்டுமே இருப்பதால் தேர்தல்களம் படு பரபரப்பாக இருக்கிறது.

மக்களை சந்திக்கும் ஜெ
எதிர்கட்சிகள் தனித்தனி அணியாக களமிறங்கி தேர்தலை சந்திக்க தயாராவது அதிமுகவிற்கு சாதகம்தான் என்றாலும் முதல்வர் ஜெயலலிதாவும் மக்களை சந்திக்க தயாராகிவிட்டாராம். ஜனவரியில் முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தி அரசின் சாதனைகளை விளக்கி பேச இருக்கிறாராம் ஜெயலலிதா. இதற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறதாம்.

234 தொகுதிகளுக்கும் குறி
லோக்சபா தேர்தலில் 40ம் நமதே என்று களமிறங்கி பிரம்மாண்ட வெற்றி பெற்ற அதிமுக,. ‘மிஷன் 234' என இலக்கு வைத்து ‘ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்' என தன் பங்குக்கு பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். விஜயதசமி அன்று அ.தி.மு.க-வின் இணையதள பிரிவின் மூலம் இந்த மிஷனை ஆரம்பித்து வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

ஓபனிங்கே அசத்தல்
அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த ‘மிஷன்'தான் ஓப்பனிங் பேஜில் வைத்திருக்கிறார்கள். அதில், பச்சை வண்ணத்தில் தமிழ்நாடு வரைபடத்தோடு ஜெயலலிதா கையை உயர்த்தி சிரிக்கிறார். அந்த சிரிப்பும், பின்னணி இசையும், அதிமுக தொண்டர்களை கவரும் என்பது அதிமுகவின் நம்பிக்கை.

எதிர்கட்சிகளுக்கு பதிலடி
ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்வதை அட்டாக் செய்ய இதுநாள்வரை அமைதியாக தயாராக இருந்த அதிமுக அதிரடியாக களமிறங்கி விட்டது. கடந்த எம்.பி. தேர்தலை அ.தி.மு.க., அமைதி! வளம்! வளர்ச்சி! என எதிர்கொண்டது. இப்போது ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம் என களமிறங்கியுள்ளது எதிர்கட்சிகளுக்கு நிச்சயம் கிலியை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications