திமுகவை தில்லு முல்லு கட்சி என தரக்குறைவாக விமர்சிப்பதா? பிரேமலதாவுக்கு மு.க. அழகிரி கண்டனம்
மதுரை: திமுகவை தில்லு முல்லு கட்சி என தரக்குறைவாக விமர்சித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு மு.க. அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டில் திமுக, அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார் பிரேமலதா. திமுகவை தில்லு முல்லு கட்சி; அதிமுகவை அனைத்திலும் தில்லு முல்லு கட்சி என்றெல்லாம் சாடினார்.

இம்மாநாட்டில்தான் தேமுதிக தனித்தே போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்தார். இதற்கு விளக்கம் தந்த பிரேமலதா, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் என்றார்.
இந்நிலையில் திமுக மீதான விமர்சனங்கள் தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி கூறியுள்ளதாவது:
விஜயகாந்த்-பிரேமலதா திருமணத்தை இதே மதுரையில் தலைவர்தான் நடத்தி வைத்தார். நான்தான் முன்னின்று ஏற்பாடுகளையெல்லாம் செய்தேன்.
திமுகவை தில்லு முல்லு கட்சி என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க தேமுதிகவுக்கு, பிரேமலதாவுக்கு தகுதியே இல்லை. இந்த விமர்சனத்துக்கு திமுகவில் இருந்து ஏன் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
திமுகவில் கருணாநிதியை ஏமாற்றி பதவியை அனுபவிக்க நினைப்பவர்கள்தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தினரின் அராஜகத்தால்தான் விஜயகாந்த், திமுகவுடனான கூட்டணிக்கு வரவில்லை.
திமுகவுடன் விஜயகாந்த் பேரம் நடத்திப் பார்த்தார்.. அது நடக்காததால் தனித்துப் போட்டி என அறிவித்திருக்கிறார். தற்போது வேறு ஒரு கட்சியுடன் பேரம் பேசி முடித்துவிட்டார். ஓரிருநாட்களில் அதுவும் தெரிந்துவிடும்.
தேமுதிக தலைமையிலான கூட்டணியில் விரைவில் பாஜக இணைந்துவிடும்.
இவ்வாறு மு.க. அழகிரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications