கட்சி பொருளாளர் என்ன செய்யணும், இவர் என்ன செய்கிறார்: ஸ்டாலினை தாக்கிப் பேசிய அழகிரி
நாகர்கோவில்: கட்சி பொருளாளர் என்ன செய்ய வேண்டும் இவர் என்ன செய்கிறார் என்று முக அழகிரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை தாக்கிப் பேசியுள்ளார்.
நாகர்கோவிலைச் சேரந்த தனது ஆதரவாளரான கபிலன் என்பவரின் இல்ல காதணி விழாவில் மு.க. அழகிரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

கூட்டம்
குமரி மாவட்டத்தினர் ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர். இது பதவியை எதிர்பார்த்து அல்ல மாறாக நம்பிக்கையின் பேரில், நட்பின் அடிப்படையில் திரண்டுள்ள கூட்டம். இந்த மாவட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும் என்று கூறி பலர் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பிறகு அவர்களின் குறைகள் தீர்க்கப்படும்.

ஹெலன் டேவிட்சன்
குமரி தொகுதி திமுக வேட்பாளர் பற்றி பத்திரிக்கைகளில் படித்தேன். அதில் தற்போதைய எம்.பி. ஹெலன் டேவிட்சனின் சாதனைகள் பற்றி எழுதியிருந்தது. ஆனால் அவருக்கு இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.

கனிமொழி
எனது சகோதரி கனிமொழி திகார் சிறையில் இருந்தபோது ஹெலன் தினமும் அவரை சந்தித்தார். அதனால் தான் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.

பணம்
வேட்பாளர்களை தகுதி அடிப்படையில் அல்லாமல் பணம் அடிப்படையில் தேர்வு செய்துள்ளனர். அவர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. விருதுநகர், தூத்துக்குடியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இதே நிலை தான்.

மதுரை
மதுரை வேட்பாளர் நான் ஆதரவு தெரிவித்தால் வெற்றி பெறுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் இதுவரை என்னை சந்திக்கவில்லை. அப்படியே வந்து சந்தித்தாலும் நான் அவரை ஆதரிக்க மாட்டேன்.

டி.ஆர். பாலு
கடந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரிலே போட்டியிட்டு வென்ற டி.ஆர். பாலு தற்போது தஞ்சையில் போட்டியிடுகிறார். அரக்கோணத்தில் போட்டியிட்டவர் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுகிறார். தொகுதி மாறி போட்டியிட்டு வெற்றி பெற இவர்கள் என்ன எம்.ஜி.ஆரா அல்லது கலைஞரா?

போஸ்டர்
எனது பிறந்தநாளுக்காக மதுரையில் போஸ்டர் அடித்த எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். புதுக்கோட்டையில் எனது கூட்டத்திற்கு வந்தவர் நீக்கப்பட்டார். ஆனால் தற்போது வருங்கால முதல்வரே, நாளைய தமிழகமே என்று போஸ்டர் அடிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொருளாளர்
கட்சியின் தலைவரையே கத்தி முனையில் மிரட்டுகிறார்கள். கட்சியின் பொருளாளர் கணக்கு வழக்கு பார்க்காமல் கட்சி தலைவருக்கு வரும் கடிதங்கள் மற்றும் குறைகளை அவரது பார்வைக்கே செல்லவிடாமல் தடுக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயத்தில் எனக்கும் பங்கு உள்ளது. அதில் உள்ள செங்கல் ஏன் சிமெண்ட்டில் கூட எனக்கு உரிமை இருக்கிறது. என்னை திமுகவில் இருந்து பிரித்துவிட முடியாது.

கருணாநிதி
கட்சி தலைவர் பிரச்சாரத்திற்காக இன்று மதுரை வருகிறார். அவர் என் மீதுள்ள பாசத்தால் என்னை சந்தித்தால் அவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று தான் நான் நாகர்கோவிலுக்கு வந்துவிட்டேன். தேர்தல் முடிந்த பிறகு நிலைமை மாறும். கட்சியின் தலைவர் நம்மை அரவணைக்கும் நேரம் வரும் என்றார்.












Click it and Unblock the Notifications